Tuesday, February 24, 2009

விடுதலை ராசேந்திரனிடமிருந்து இன்னும் ‘விடுதலை’யாகாத காழ்ப்புணர்ச்சி!.....

/////‘காக்கை குயிலாகாது; பதவியைக் காப்பாற்றிக் கொள்ள இந்து மதவெறியர்களுக்கு அனுசரணையாக நடந்து கொண்டவர்தான் வி.பி.சிங்' என்ற தலைப்பில் வெளிவந்துள்ள அக்கட்டுரை, வி.பி.சிங்கைக் குற்றவாளி கூண்டில் நிறுத்தியுள்ளது. குஜராத் மோடி அளவில் வி.பி.சிங்கைக் கொண்டு வந்து நிறுத்தி, "குற்ற"ப் பட்டியல்களை அடுக்கியிருக்கிறது. பச்சைப் பார்ப்பனியப் பார்வையில் வெளிவந்திருக்கும் அக்கட்டுரை 'துக்ளக் சோ', 'சு.சாமி' கும்பலை நிச்சயமாக மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கும். 'பொதுவுடைமை கட்சிகளில் மீண்டும் தமது குரல் ஒலிக்கத் தொடங்கிவிட்டது' என்று "அவாள்"கள் கருதினால், அதில் தவறு இல்லை என்பதே நமது கருத்து./////

மேற்கண்ட வரிகளை மீண்டும் ஒருமுறை நிதானமாக வாசித்துப் பாருங்களேன். இது பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை ராசேந்திரன், புதிய ஜனநாயகத்துக்கு எதிராக கட்டியெழுப்பியுள்ள மணற்கோபுரம்!

“பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இந்து மதவெறியர்களுக்கு அனுசரனையாக நடந்து கொண்டவர்தான் வி.பி.சிங்” என்கிற குற்றச்சாட்டை முன்னிறுத்தி எழுதப்பட்டிருக்கும் விமர்சனம், எப்படி பார்ப்பனியத்தைக் குளிர்விக்கும்? பார்ப்பன-இந்துவெறியர்களை ஆதரித்தவன் என்று ஒருவனைக் குற்றம் சாட்டினால், பார்ப்பனியவாதிகளுக்கு நம்மீது ஆத்திரம் வருமா, வராதா; என்பதை நீங்களே (வேறாருமல்ல இதைப் படித்துக் கொண்டிருக்கும் நீங்கள்தான்) சொல்லுங்கள். ஆனால், இப்போது ஆத்திரம் விடுதலை ராசேந்திரனுக்கு வருகிறதே, அது ஏன்? இதனை அடிப்படையாகக் கொண்டு, பார்ப்பன-இந்துவெறியர்களை எதிர்த்து எழுதப்பட்டிருப்பதை அவதூறு செய்வதனால், விடுதலை ராசேந்திரனுக்கு பார்ப்பன ஆதரவு கண்ணோட்டம் இருப்பதாக நாமும் சொல்லலாமா? இல்லையா? ஆனால், அப்படியெல்லாம் நாம் சொல்லவில்லை. அது சரியான மதிப்பீடும் அல்ல என்பது விடுதலை ராசேந்திரனுக்குத் தெரியாது; நமக்குத்தான் தெரியும்.

பிறகு ஏன், பெரியாரின் பகுத்தறிவுப் பாசறையில் ‘புடம்போடப்பட்ட(!)’ விடுதலை ராசேந்திரன் இவ்வாறு எழுத வேண்டும், என்பதை இப்பதிவில் பார்ப்போம்.

’சமூக நீதி’க் காவலராக திராவிடக் கட்சிகளாலும் போலி கம்யூனிஸ்டுகளாலும் ’தலித்’ அரசியல் பேசுபவர்களாலும் போற்றப்படும் வி.பி.சிங்கின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தி புதிய ஜனநாயகம் “காக்கை குயிலாகாது...” என்கிற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தது. அக்கட்டுரை வி.பி.சிங்கிற்கு எதிராக வைத்திருக்கும் கேள்விகளில் சிலவற்றை இங்கே (தேவை கருதி) பட்டியலிடுகிறேன்.

1. சுமார் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக அரசியலில் இருந்த வி.பி.சிங்கை இடஒதுக்கீட்டுக்காக மட்டும் தூக்கி வைத்துக் கொண்டாடுவதன் நோக்கம் என்ன? ஜெயலலிதா, பார்ப்பன பயங்கரவாதி சங்கராச்சாரியைத் துணிவோடு கைது செய்ததை வைத்து அவரைப் "பார்ப்பனிய எதிர்ப்புப் போராளி' என்று கொண்டாட முடியுமா?

2. காங்கிரசில் இருந்தபோது அவசரநிலை பாசிச ஆட்சியை அவர் தீவிரமாக ஆதரித்ததையோ, அவருடைய குருநாதர் சஞ்சய்காந்தி காட்டுமிராண்டித்தனமாக முசுலிம்கள் மீது பாய்ந்து குதறியபோது அதனை அவர் கண்டும் காணாமல் இருந்ததையோ, மனித உரிமை பேச காஷ்மீர் வரை போகும் அ.மார்க்ஸ் ஏன் கண்டுகொள்வதில்லை?

3. அவசரநிலைப் பாசிச ஆட்சிக் காலத்தில் தி.மு.க. பிரமுகர்கள் சிறையில் அடைக்கப்பட்டு அடித்து நொறுக்கப்பட்ட போதிலும், வி.பி.சிங்கின் அவசரநிலை ஆதரவை தி.மு.க. ஏன் விமர்சிப்பதில்லை?

4. 1980இல் இவர் உ.பி. முதல்வராக இருந்தபோதுதான், உ.பி. அரசின் ஆயுதப்படை போலீசு மொராதாபாத் முசுலிம்களை இனப்படுகொலை செய்து, இந்தியாவின் மதக்கலவர வரலாற்றில் புதுப்பரிணாமத்தை உருவாக்கியது. இவரின் ஆட்சியில்தான் ஆதிக்க சாதிப் பண்ணையார்களின் சட்டவிரோத ஆயுதப்படைகள் தாழ்த்தப்பட்டோர் மீது தொடர்ச்சியான தாக்குதல்களைத் தொடுத்து நூற்றுக்கும் மேற்பட்டவர்களைக் கொன்று குவித்தன. ஒவ்வொரு தாக்குதலுக்குப் பிறகும் "நிலைமை விரைவில் சரிசெய்யப்படும்' என்ற வெற்று அறிக்கையைத் தவிர, இவர் செய்தது எதுவுமில்லை. கான்பூருக்கு அருகேயுள்ள தஸ்தம்பூர் தாழ்த்தப்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டதையடுத்து, 1982இல் இவர் பதவி விலகவேண்டி வந்தது. 1984 சீக்கியப் படுகொலைக்காக 1989இல் மன்னிப்புக் கேட்ட வி.பி.சிங், தனது ஆட்சியில் கொலையுண்ட முஸ்லிம்களுக்காகவோ, தாழ்த்தப்பட்டோருக்காகவோ மன்னிப்பு எதையும் கேட்டதில்லை என்பது தொல்.திருமாவுக்கோ, தமிழக முசுலீம் முன்னேற்றக் கழகத்திற்கோ தெரியாதா?

இன்னும் ஏராளமான, உறுதியான தருக்கங்களுடன் புதிய ஜனநாயகத்தின் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. (நேரமிருப்பவர்கள் மேற்கண்ட சுட்டியை அழுத்தி படித்துக் கொள்ளலாம்) இக்கட்டுரைக்கு மறுப்பு என்கிற பெயரில் ”வி.பி.சிங்கை இழிவுபடுத்தும் புதிய ஜனநாயகம்” என்கிற தலைப்பில் ‘பார்ப்பனவாதி’ என்று எமது தோழர்களை வசைபாடியிருக்கிறார், விடுதலை ராசேந்திரன். ஆனால், அவருடைய அந்த நீண்ட பதிவினூடாக மேற்கண்ட கேள்விகளுக்கு நேரடியான பதில்கள் ஏதேனும் எழுதப்பட்டிருக்கிறதா என்று ஆராய்ந்தால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.

மேற்கண்ட பு.ஜ. கேள்விகளுக்கு [வி.பி.சிங்கின் பொது வாழ்க்கை காங்கிரஸ் அரசியலில் முடங்கிக் கிடந்தபோது, காங்கிரஸ் இழைத்த தவறுகளையெல்லாம் பட்டியலிட்டு அதை வி.பி.சிங் மீது சுமத்தி, அவற்றையெல்லாம் எதிர்த்தாரா என்று 'புதிய ஜனநாயகம்' கேள்வி எழுப்புவது - அதன் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துகிறதே தவிர, நேர்மையான சமூகப் பார்வையை அல்ல. காங்கிரஸ் அரசியலில் மூழ்கிக் கொண்டிருக்காமல், அதன் சுயரூபத்தை அறிந்து வெளியேறி - காங்கிரஸ் எதிர்ப்பு அரசியலை தொடங்கியதுதான் வி.பி.சிங்கின் சிறப்பு.] என்கிற வரிகளைத்தான் தனது அதிகபட்ச பதிலாகத் தந்திருக்கிறார்.

இடஒதுக்கீட்டையும், அதனைச் சாதித்தார் என்று வி.பி.சிங்கையும், ‘காந்தி சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார் அதனால் அவர்தான் தேசத் தந்தை’ என்று சொல்வதைப் போல உருவகப்படுத்தி முட்டுக்கொடுத்து நிறுத்தப் படாதபாடுபட்டிருக்கிறார். அதன் பொருட்டு தான் பு.ஜ.வுக்கு பார்ப்பன பட்டம் சூட்டி, அகமகிழ்ச்சி கொள்ள முயன்றிருக்கிறார் பாவம்!

பார்ப்பன-வருணாசிரம படிநிலைகளில், பார்ப்பனன், சத்திரியன், வைசியன் ஆகிய வருணத்தாருக்கு சேவை செய்வதற்காக விதிக்கப்பட்டிருந்தனர் சூத்திர, பஞ்சம, சண்டாள வருணங்களைச் சார்ந்த உழைக்கும் மக்கள். அந்த உழைக்கும் மக்களை சட்ட நிருவாகத்தின் மூலம் மிரட்டிப் பணியவைத்து, உழைப்பையும் உடமைகளையும் சுரண்டிக் கொடுத்து பார்ப்பன சேவையாற்றியதைத் தவிர வேறொன்றும் செய்யாத பிறவருணத்தவர்களை இடஒதுக்கீட்டின் மூலம் சூத்திரர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளைப் பெற்றுத்தந்ததுதான் இவர்கள் வழிபடும் நீதிகட்சி முதல் வி.பி.சிங் வரையிலான ‘சமூக நீதி’ அரசுகளின் சாதனையாக இருக்கிறது. அதேநேரத்தில் வெகுசில பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகத்தவர்கள் இதன்மூலமாக சலுகைகளைப்(உரிமைகளை) பெற்றிருந்தாலும், இதனைச் சாதனையாக ஏற்கமுடியாது, இவை வெறும் சீர்திருத்தம் மட்டுமே. இந்த சீர்திருத்தத்தால் சமூகத்தில் ஒடுக்கப்பட்டுள்ள பெரும்பான்மையான மக்களுக்கு எந்த விடிவும் ஏற்படவில்லை. இதனாலேயே இவர்கள் முன்னிறுத்தும் இடஒதுக்கீட்டுக் கொள்கை ஏற்கத்தக்கதாக இல்லை என்பது பு.ஜ.வின் அழுத்தமான நிலைப்பாடு. இதனை, இடஒதுக்கீடு – ஒரு மார்க்சிய லெனினியப் பார்வை என்கிற சிறு வெளியீட்டின் மூலம் ஏற்கெனவே நேரடியாகப் பதிவு செய்திருக்கிறது புதிய ஜனநாயகம்.

ஆயிரமாண்டுகளாக நமது சமூகத்தை, உழைக்கும் மக்களை இழிவுபடுத்திய பார்பன கும்பலுக்கும், அவர்களின் எடுபிடிகளாக, அடியாளாக இருந்து கொண்டு நம்மக்களை அடிமை படுத்திவந்த ஆதிக்கசாதிக் கூட்டத்திற்கும் இடையில் நடைபெற்றுவரும் இந்த ‘இட ஒதுக்கீடு’ குறித்த குழாயடி சண்டையில் புரட்சிகர அமைப்புகளுக்கு என்ன வேலை இருக்க முடியும்? ஆளூம் வர்க்கச் சேவையாற்றுவதற்கு நடக்கின்ற போட்டா போட்டியில், இந்த மோசடியான ஆளும்வர்க்கத்தை துடைத்தெறிவதற்கு போராடும் புரட்சிகர அரசியல் இவ்விருகூட்டத்தையும் முற்றாக அழிப்பதைத்தான் முன்னிறுத்த முடியும். முன்னிறுத்துவோம்; இதில் எந்தவிதமான சமரசத்திற்கும் இடமில்லை.

இடஒதுக்கீட்டையும் அதனூடாக வி.பி.சிங்கையும் மேன்மை படுத்தி எழுதியிருக்கும் விடுதலை ராசேந்திரன், புரட்சிகர அமைப்புகளின், இடஒதுக்கீடு குறித்த மேற்கண்ட நிலைப்பாடுகளை குறைந்த பட்ச அறிவு நாணயத்தோடு பரிசீலித்திருக்கிறாரா என்கிற ஐயத்தையே அவரது பதிவு ஏற்படுத்துகிறது. இடஒதுக்கீட்டை எதிர்ப்பது நமது நோக்கமல்ல என்று தெளிவாக, அழுத்தமாக புதிய ஜனநாயகம் தெரிவித்திருக்கிறது. அதனை ஆதரிப்பதில் உள்ள பிரச்சினைகளையும் தொகுத்தளித்திருக்கிறது. அதன் மீதான விடுதலை ராசேந்திரனின் கருத்துக்கள் எதையும் நான் படித்ததில்லை. அவ்வாறு எதேனும் அவர் இதற்கு முன்னதாக எழுதியிருப்பாரேயானல் எனக்கு யாராவது அறியத்தாருங்கள்.


இந்த மோசடியான ஆளும்வர்க்கத்தை சுக்கு நூறாகப் பிளப்பதன் பொருட்டு வேலை செய்துவரும் புரட்சியாளர்கள், அதே ஆளும் வர்க்கத்தின் ஆகப்பெரும்பான்மையான கேடுகளுக்கும் துணை நின்ற, ஆளுவர்க்கப் பிரதிநிதியாகவே வாழ்ந்து மறைந்த வி.பி.சிங்கை மண்டல் பரிந்துரை என்கிற ஒன்றைக் கொண்டு ஒருபோதும் புனிதப்படுத்த முடியாது. போபர்ஸ் பீரங்கி ஊழல் என்றும் மண்டல் கமிசனென்றும் வி.பி.சிங் கூச்சலிட்டது ஓட்டுப் பொறுக்குவதற்காக மட்டும்தான். இதனால் பெரும்பான்மையான உழைக்கும் மக்களுக்கு சிறு துரும்பளவேனும் பலனில்லை என்பது தெளிவாகத் தெரியும் போது அதற்காதரவாக குரல் கொடுப்பது முற்றிலும் பலனற்றது.

////////ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் - வி.பி.சிங் - புரட்சிகர மார்க்சிய லெனினியக் கட்சியின் உறுப்பினர்கள் அல்ல. ம.க.இ.க.வின் தத்துவார்த்தப் பார்வையில் கூற வேண்டுமானால், தரகு அதிகாரவர்க்க முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அரசியலில் இருந்த ஒருவரே, அந்த அரசியலுக்குள் அதிர்வுகளை நிகழ்த்தியவர் என்பதுதான். அந்த அதிர்வுகளின் தாக்கத்தைக் கவனத்தில் கொள்ளாமல் ஏற்கனவே இருந்த 'சமூக நிலையைக் குலைத்து விட்டாரே' என்று புலம்பும் பார்ப்பனியக் குரலோடு தன்னையும் சேர்த்துக் கொண்டு அதன் மூலம் தன் பங்கிற்கான 'சேற்றை' பார்ப்பனர்களுடன் சேர்ந்து கொண்டு வி.பி.சிங் மீது வீசுவது பார்ப்பனிய சார்புப் பார்வை அல்லவா? //////////

இங்கே நான் குறிப்பிட்டுள்ள புதியஜனநாயகத்தின் இடஒதுக்கீடு மீதான மதிப்பீடுகளை அறவே புறக்கனித்து, திருவாளர் ராசேந்திரன் ‘’ஏற்கெனவே இருந்த சமூக நிலையைக் குலைத்துவிட்டாரே...” என்று புதிய ஜனநாயகம் புலம்புவதாக எழுதியிருக்கிறார். ஏற்கெனவே இருந்த, இப்போது இருக்கின்ற சமூக நிலைமைகளை அடியோடு புரட்டிப் போடுவதுதான் புதிய ஜனநாயகத்தின் அரசியல் என்பது விடுதலையாருக்குத் தெரியாது போலும்! சொல்வது அவதூறாக இருந்தாலும் கொஞ்சமாவது பொருந்தச் சொல்ல வேண்டாமா?

அடுத்து, ம.க.இ.க.வின் திட்டத்தில் பார்ப்பன எதிர்ப்பு கைவிடப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளதுதான் இது அவதூறுப் பதிவு என்பதற்கான ஒரு சோற்றுப் பதம். ”இந்து எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு போன்ற பல்வேறு சூழல்களில் களப்பணிகளில் இணைந்திருக்கிறோம்....” என்பதாக இக்கட்டுரையினைத் தொடங்கியுள்ள விடுதலையார்தான், ம.க.இ.க. பார்ப்பன எதிர்ப்பைக் கைவிட்டுவிட்டதாகவும் திரிக்கிறார். இதில் எது உண்மை அய்யா?!

இவர் குறிப்பிட்டுள்ள 1998ஆம் ஆண்டிற்குப் பிறகு மட்டும் ம.க.இ.க. மேற்கொண்ட பார்ப்பன எதிர்ப்பு போராட்டங்களை மொத்தமாக இருட்டடிப்பு செய்வதாக இருக்கிறது இவரது இந்த கருத்து. 2003 –ல் தான் ”பார்ப்பனிய, மறுகாலணிய பண்பாட்டுப் படையெடுப்பிற்கு எதிரான போராட்டமாக”, பார்ப்பனிய பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு மிகப் பிரமாண்டமாக நடத்தப்பட்டது.

இவர் மேற்குறிப்பிட்டுள்ள காலகட்டத்திற்குப் பிறகுதான் தில்லைப் போராட்டத்தினை ஆறுமுக சாமியைக் கொண்டு தொடங்கி இன்றுவரை அதே வேகத்தோடும் வீச்சோடும் நடத்திக் கொண்டிருக்கிறது. பார்ப்பன எதிர்ப்பு போராட்டங்களில் ம.க.இ.க.வின் செயல்பாடுகள் குறித்து தமிழக மக்களுக்குத் தெரியும், உங்கள் கட்சியிலுள்ள கீழ்மட்ட அணிகளுக்கும் நன்றாகவே தெரியும், பாவம் உங்களுக்குத்தான் தகவல் ஏதும் வரவில்லை போலும்!

///////"இன்றைய நிலையில் இந்திய மக்கள் மீது மூன்று மலைகள் - அமெரிக்கத் தலைமையிலான மேல்நிலை வல்லரசுகள், தரகு அதிகாரவர்க்க முதலாளித்துவம், நிலப் பிரவுத்துவம் ஆகியவை அழுந்திக் கொண்டிருக்கின்றன. இம் மூன்றும் தான் முக்கியமாக இந்திய மக்களின் எதிரிகளாகும்" - (ம.க.இ.க.வின் கட்சித் திட்டம்-1998). - என்று 1998 இல் திட்டத்தை வகுத்துவிட்டார்கள். //////

ம.க.இ.க. குறிப்பிட்டுள்ள அந்த மூன்று மலைகள், பொருளாதார ரீதியில் தேசத்தைச் அடிமைப்படுத்தி, அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரங்களையும் சுரண்டிக் கொழுத்துக் கொண்டிருக்கிறது. அந்த சுரண்டல் வாத ஆளும் வர்க்கத்துக்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் சேவை செய்யும் அமைப்பாகத்தான் பார்ப்பன பயங்கரவாதம் திகழ்கிறது, என்பதையும் பார்ப்பன பயங்கரவாதத்திற்கு எதிராகவும், மறுகாலணியத்துக்கு எதிராகவும் போராட்டங்கள் கூர்மை படுத்தப்படவேண்டும் என்ற ம.க.இ.க.வின் அறைகூவலெல்லாம் விடுதலையாரின் செவிகளை எட்டவில்லை போலும்!

ம.க.இ.க.வின் திட்டத்தை சுருக்கி, வெட்டி ‘தேவைக்கேற்ற வகையில்’ பயன்படுத்துகின்ற விடுதலையாரின் பார்வையில் நிறைந்திருக்கும் காழ்புணர்ச்சிக்கு என்ன பெயர் சூட்டியழைக்கலாம்? இவரது பார்ப்பன எதிர்ப்பை, ம.க.இ.க., பு.ஜ., மீதான அவதூறுகளை பாராட்டுபவனைக் கொண்டு பார்த்தாலே இவரது கருத்துக்களின் தரம் எளிதாகப் புரியும். இவரது கட்டுரையினை அட்சரம் பிசகாமல் தனது தளத்தில் பதிவிட்டு, நன்றியையும் பொங்கி வழியவிட்டிருக்கிறான், சிபிஎம் கட்சியின் செல்வப்பெருமாள்.

வி.பி.சிங்கை பு.ஜ. விமர்சித்திருப்பது பார்ப்பனர்களைக் குளிர்வித்திருக்கிறது, என்று உருவகப்படுத்தும் விடுதலை ராசேந்திரனுக்கு ஒரேயொரு கேள்வி. உங்களுடைய இந்த கூற்று, பார்ப்பனியத்தில் கேவலம் பூநூலைக் கூட இழக்க மனமின்றி உழலும் சி.பி.எம். யோக்கியர்களைக் குளிர்வித்திருக்கிறதே, இதற்குப் பெயர்தான் பார்ப்பன எதிர்ப்பா? உங்களின் கட்டுரை பு.ஜ.வை சிறுமைபடுத்தவில்லை, மாறாக அதனை சி.பி.எம். ஆதரிப்பதுதான் உங்களைக் கடுமையாகச் சிறுமை படுத்தியிருக்கிறது. உங்களை நோக்கி வரும் பாராட்டுக்களே உங்களுக்கு எதிர்வினையாக மாறியிருக்கிறது. இதையாவது கொஞ்சம் பகுத்தறிவு கண் கொண்டு பாருங்களேன்!

தோழமையுடன்,

ஏகலைவன்.

தொடர்புடைய பதிவுகளையும் கீழ்கண்ட சுட்டியைப் பயன்படுத்தி அவசியம் படியுங்கள் தோழர்களே!

1. ஆண்ட சாதிகளும், இடஒதுக்கீட்டின் உள் அரசியலும்...
2.புரளி பேசும் போலி தமிழ்தேசியவாதிகள்
3. இடஒதுக்கீடு: சாதி இந்துக்களுக்கு வக்காலத்து தான் சமூகநீதியா?
4. பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு: மீண்டும் தலைதூக்கும் பார்ப்பனத் திமிர்! சமூகநீதிக் கட்சிகளின் சமரசம்!!
5. குஜ்ஜார் போராட்டமும், சாதிக் கொழுப்பெடுத்த பார்ப்பனவெறி டைம்ஸ் ஆப்பு இந்தியாவும்!!

18 comments:

said...

//இப்போது ஆத்திரம் விடுதலை ராசேந்திரனுக்கு வருகிறதே, அது ஏன்? இதனை அடிப்படையாகக் கொண்டு, பார்ப்பன-இந்துவெறியர்களை எதிர்த்து எழுதப்பட்டிருப்பதை அவதூறு செய்வதனால், விடுதலை ராசேந்திரனுக்கு பார்ப்பன ஆதரவு கண்ணோட்டம் இருப்பதாக நாமும் சொல்லலாமா? இல்லையா? ஆனால், அப்படியெல்லாம் நாம் சொல்லவில்லை. அது சரியான மதிப்பீடும் அல்ல என்பது விடுதலை ராசேந்திரனுக்குத் தெரியாது; நமக்குத்தான் தெரியும்.///

சரியான பார்வை... அருமையான கட்டுரை.

Anonymous said...

தோழரே
வேலை நெருக்கடியில் விடுதலை ராஜேந்திரனின் உளறலை சுக்குநூறாக உடைப்பதற்கு நேரமில்லையே என்று வருந்திக்கொண்டிருந்த வேளையில் உங்கள் கட்டுரை அந்த ஏக்கத்தை கூர்மையாக தணித்திருக்கிறது. இந்தக் கட்டுரையை கீற்று, மற்றும் பெரியார் திராவிடர் கழகம், விடுதலை ராஜேந்திரன் மற்ற தமிழன வாதிகளுக்கு அனுப்புங்கள்.உங்கள் விமரிசனம் ஆதரப்பூர்வமாகவும், ஆழமாகவும், எளிமையாகவும், கூர்மையாகவும் விடுதலை ராஜேந்திரனின் புரட்டை பிரட்டிப் போட்டிருக்கிறது. வாழத்துக்கள்

வினவு

said...

கீற்று இணையதளத்தில் இதனைப் பதிந்த prognostic தோழருக்கு நன்றி!

தோழர் வினவு அவர்களுக்கும் நன்றி.

Anonymous said...

பல்வேறு சம்பவங்கள் நடந்து வரும் போது விடுதலையாரின் இந்த மோசடி கட்டுரையை அம்பலப்படுத்தும் பணி செய்யபடாமலேயே போய்விடுமோ என்று வருந்தியிருந்த வேளையில் உங்களது இந்த கட்டுரை தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளது.

விடுதலையார் இந்த கட்டுரையை ஆத்திர அவசரமாக அள்ளித் தெளித்து எழுதியுள்ளார்.

Anonymous said...

//மறுகாலணிய //

எழுத்துப் பிழைகளை கவனிக்கவும். மறுகாலனிய என்பதுதான் சரி. இது இன்னொரு செருப்பு என்று அர்த்தம் வருகிறது. சிற்றிதழ் வாசிப்பை அதிகப்படுத்திக் கொள்வது எழுத்து நடையை மெருகேற்றுவதுடன் இது போன்ற தவறுகளை களைய உதவும்

Anonymous said...

நன்று.

said...

////////
Anonymous said...
//மறுகாலணிய //

எழுத்துப் பிழைகளை கவனிக்கவும். மறுகாலனிய என்பதுதான் சரி. இது இன்னொரு செருப்பு என்று அர்த்தம் வருகிறது. சிற்றிதழ் வாசிப்பை அதிகப்படுத்திக் கொள்வது எழுத்து நடையை மெருகேற்றுவதுடன் இது போன்ற தவறுகளை களைய உதவும்

FEBRUARY 27, 2009 12:25 PM ///////

பிழையினைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. திருத்திக்கொள்கிறேன்.

said...

தோழர் மதிமாறனின் தளத்தில் மட்டுறுத்தலுக்காக நேற்றிலிருந்து காத்துக்கிடக்கும் எனது பின்னூட்டம் இதுதான். இதனைப் பார்க்கின்ற தோழர்கள் கருத்து தெரிவிக்கலாம்.
-----------------------------------
ஏகலைவன் (09:27:50) : உங்கள் கருத்து மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது.

தோழர், இந்தப் பதிவில் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். இந்தப் பதிவோடு நேரடியாக தொடர்பில்லாதபோதும், பெரியார் திராவிடர்கழகத்தின் செயல்பாடுகளைக் கொஞ்சம் உரசிப்பார்க்கும் எனது பதிவு ஒன்றின் சுட்டியை மட்டும் இங்கே பதிவிடுகிறேன்.

பெ.தி.கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை ராசேந்திரன், புதிய ஜனநாயகத்துக்கு பார்ப்பன பட்டம் சூட்டி முழுக்க முழுக்க அவதூறுகளாலான கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதனை தருக்க ரீதியாக மறுக்கும் கடமையை உணர்ந்து நான் பதிந்த பதில்தான் மேற்கண்ட சுட்டியிலுள்ள பதிவு.

பார்ப்பன-இந்துவெறிக்கும் ஜெயேந்திரனுக்கும் ஒத்தூதிக் கொண்டிருந்த ஞாநியை ‘தோழமையோடு இருக்கிறார்’ என்ற காரணத்திற்காக விமர்சிக்காமல் இருந்த பெ.தி.கழகம், ஜெயேந்திரன் கைதானபோது அவனது குற்றங்களை அம்பலப்படுத்தி, அதனுள் இருந்த பார்ப்பன-இந்துவெறி சதிவலைகளையும் மக்கள் முன் எடுத்துவைக்கும் பிரச்சார இயக்கத்தை நடத்திய ம.க.இ.க., புதிய ஜனநாயகத்தை காழ்ப்புணர்ச்சியோடு அவதூறு செய்தது சரி என்று கருதுகிறேன். ஞாநியின் தோழர்களால் புரட்சிகர சக்திகளை வேறெப்படி மதிப்பிட முடியும்?

பெரியாரியத்தை வீரமணியின் கொட்டடியிலிருந்து மீட்டெடுத்த தோழர்கள் என்று பெ.தி.க. குறித்து நான் கொண்டிருந்த நல்ல மதிப்புகள் சரியும் வண்ணம் இருக்கிறது அவர்கள் ஞாநி போன்றவர்களை ‘தோழமையோடு பராமரிப்பது’. ஒருவேளை ஞாநி முற்போக்காளன் என்கிற அடையாளத்தோடு இருந்த காலகட்டத்தில் தோழமை பாராட்டியிருந்தால் கூட நாம் சகித்துக்கொள்ளலாம். அவன் முழுக்க அம்பலமாகிவிட்டபிறகும் அவனுடன் ‘தோழமை’ பேனுவதற்கு எந்த முகாந்திரமுமில்லை, பச்சையான சந்தர்ப்பவாதத்தைத் தவிர.

ஞாநி, கொளத்தூர் மணியைப் பற்றி நீங்கள் குறிப்பிட்டுளதைப் போல, நயவஞ்சக எண்ணத்தோடு எழுதியது, அவனது பார்ப்பனக் கொழுப்பின் எதார்த்தம். அவனைப்பற்றி நன்றாக தெரிந்திருந்தும், விமர்சிக்காமல் மவுனம்காத்த பெ.தி.க.வின் விடுதலை ராசேந்திரனும், கொளத்தூர் மணியும் எதார்த்தவாதிகள் அல்ல!

தோழமையுடன்,
ஏகலைவன்

said...

காத்திருப்பது இதுவும்தான்....
-----------------------------------

ஏகலைவன் (09:31:54) : உங்கள் கருத்து மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது.

மன்னிக்கவேண்டும் தோழர்களே! மேலே நான் குறிப்பிட மறந்த சுட்டி இதுதான்.

விடுதலை ராசேந்திரனிடமிருந்து இன்னும் ‘விடுதலை’யாகாத காழ்ப்புணர்ச்சி!…

http://yekalaivan.blogspot.com/2009/02/blog-post_24.html

said...

வே மதிமாறன் தளத்தில் இட்ட பின்னூட்டம் இங்கும் ஒரு பிரதி இடுகிறேன்:

அசுரன் (06:29:23) : உங்கள் கருத்து மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது.

//அதே சமயம் வி.பி.சிங் குறித்த மாற்றுக் கருத்துக்களையும் வைக்கிறோம். //

மாற்றுக் கருத்து எதையும் விடுதலை ராசேந்திரனோ நீங்களோ வைத்த் மாதிரி தெரியவில்லையே? வி.பி.சிங் விமர்சிப்பது என்ற பெயரில் பல முற்போக்கு முகமூடிகளின் சமரசம் கேள்வி கேட்க்கப்பட்ட கடுப்பி மறைமுக பார்ப்பனியம் என்ற அவதூறை வாரியிறைத்தைத்தான் செய்துள்ளீர்கள். மறைமுக பார்ப்பனியம் என்று வெளிப்படையாகவே சொல்ல வேண்டியதுதானே? சந்தேகம் என்பது போல மூடி மறைத்த வெட்கங்கெட்ட வார்த்தை பயன்படுத்துவானேன்?

//
தமிழர்களை அவர்கள் பெரியாரியலுக்கு / ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இருக்கும்போது பாராட்டியிருக்கிறோம். எதிராக மாறும் போது எதிர்த்திருக்கிறோம்.//

இப்படி ஒருவரது நிலைப்பாடு நேர்மையாக இருக்கும் பட்சத்தில் பாராட்டவும், எதிரிடையாக இருக்கும் போது அம்பலப்படுத்தவும் உங்களுக்கு மட்டும்தான் உரிமையுள்ளதா அதி அசுரன்? அப்படி எதுவும் காப்புரிமை வாங்கியுள்ளரா பெரியார் திகவின் மானமிகு விடுதலை ராசேந்திரன்?

ம க இ கவிற்கு வி.பி.சிங்கின் இது போன்ற அரசியல் நேர்மையின்மையை விமர்சிக்கும் உரிமை கிடையாதா? அதை செய்தால் மறைமுக பார்ப்பனியம் என்று ஒற்றை வார்த்தையில் சேறு அடிக்கும் கேவலத்துக்கு வேறதாவது செய்யலாம் மானமிகு சுயமரியாதை செல்வங்கள். நேர்மையிருந்தால் அந்த குற்றச்சாட்டுகள் குறித்து பதில் சொல்லுங்கள்? ம க இ க கட்சித் திட்டத்தில் பார்ப்பனிய எதிர்ப்பு கைகழுவப்பட்டுள்ளது என்ற அரிய கண்டுபிடிப்பை/பொய்யை வெட்கமின்றி பேசியுள்ளாரே விடுதலை ராசேந்திரன் அதற்கும் நேர்மை என்று எதுவும் இருந்தால் பதில் சொல்லுங்கள்.

வரவனையானை விமர்சனம் செய்த நீங்கள் அவரை போலவே தர்க்க நியாயமின்றி ‘மறைமுக பார்ப்பனியம்’ என்ற ஒற்றை வார்த்தையில் மறைந்து வாழும் அவலத்துக்கு என்ன பதில் சொல்லுவீர்கள்?

உங்களுக்கு வேறு பிரச்சினை. வி. பி. சிங்கை அம்பலப்படுத்தியதில் அம்பலமானது வி. பி. சிங் மட்டுமல்ல என்பதுதான் உங்களது இந்த ஆவேச பிதற்றலுக்கு அடிப்படை.

அசுரன்

++++++++++++++++++++


அசுரன் (06:33:29) : உங்கள் கருத்து மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது.
//‘மறைமுக பார்ப்பனியம்’ //

இதற்கு ஆதாரம் கொடுக்க சொல்லி நிர்ப்பந்திக்கிறேன் அதி அசுரன் உள்ளிட்டவர்களை. வெறுமனே மருதையன் என்ற ஒற்றை நபரை முன்னிறுத்தி ஒரு புரட்சிகர இயக்கத்தை பற்றி அவதூறு பேசுவதை விட கேவலம் எதுவுமில்லை என்பதை அதி அசுரனுக்கும் அவரது தலைவர் விடுதலை ராசேந்திரனுக்கும்(ஒரு வேளை இங்கு பேசுவது அந்த தலைவரின் காதுகளுக்கு எட்டும் எனில்) சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

இப்படி ஒரு வாதம் வைப்பதே உங்களிடம் நேர்மையாக பேசுவதற்கு எதுவுமில்லை என்பதையே காட்டுகிறது.

பெரியார் சிலை உடைப்பில் உங்களது அணிகளையே காட்டிக் கொடுத்த பெரியார் திக தலைமைதான் அந்த நேரத்தில் அவர்களுடன் சேர்ந்து இருந்த ம க இகவை மறைமுக பார்ப்பனியம் என்று சொல்லுகிறது.

யாரை பார்த்து யார் சொல்லுவது? இந்திய பார்ப்பனிய தரகு வர்க்கத்தை எதிர்த்து உறுதியுடன் நிற்க துப்பில்லாத உங்களை நாங்கள் குற்றம் சாட்டுகிறோம் ‘மறைமுக பார்ப்பனியம்’ என்று விவாதம் செய்ய தயாரா?

விளைவுகள் அஞ்சினால் வராதீர்கள்.

அசுரன்

said...

அசுரன் (06:49:34) :

ஈழ விடுதலைப் போரின் தமிழகத்து ஹோல்சேல் டிஸ்டிரிபியுட்டர்ஸ்களாக தம்மையே சொந்தமாக நியமித்துக் கொண்ட நெடுமாறன், வைகோ போன்றவர்கள் இன்றைக்கு ஈழவிடுதலைப் போரையே பாஜக உள்ளே வருவதற்கான அடிப்படை அரசியலாக மாற்ற ஒத்தாசை செய்வதையும். அதற்கு பெ. மணியரசன் கும்பல் ஒத்து ஊதுவதையும் குறித்து பெதிக என்ன கருத்து வைக்கும்? இது மறைமுக பார்ப்பனியம் என்று தைரியமாக விமர்சிக்கும் துணிச்சலும், சுயமரியாதையும், நேர்மையும் அதி அசுரனுக்கு இருக்க வேண்டாம, ஆனால் தலைவர் மானமிகு விடுதலை ராசேந்திரனுக்கு இருக்கிறதா?

சொல்லுவாரா? சொல்லவில்லை எனில் நாம் வைக்கிறோம் பெதிக ஒரு மறைமுக பார்ப்பனிய கட்சி என்ற எமது சந்தேகத்தை.

அசுரன்

Anonymous said...

//காழ்புணர்ச்சி!....."//

தோழர்,

ஏற்கனவே வந்த 'எழுத்துப் பிழை திருத்தி' நான் தான்.

கட்டுரையின் தலைப்பிலேயே மிக தவறான பொருள் தரும் வகையில் தவறுள்ளது.

புணர்ச்சி என்பது உடலுறவைக் குறிக்கும். ஒரு 'ப்' விடுபட்டுள்ளது.

காழ்ப்புணர்ச்சி என்பதே சரி.

இது போல எழுத்துப் பிழை, இலக்கணம் இவற்றில் கவனமின்றி இருப்பது சரியல்ல. கட்டுரைகளின் கருத்துக்கள் அருமையாக இருக்கும் போது இது போன்ற விசயங்களை தவிர்ப்பதே சரி.

said...

தவறைச் சரிசெய்துவிட்டேன் தோழர். இனி நிகழாதவண்ணம் கவனமாக இருக்கிறேன், சுட்டிக்காட்டியமைக்கு நன்றி!

said...

தோழர் மதிமாறன் தளத்தில் இட்ட இந்த பின்னூட்டங்களை இங்கு இடுவது பரந்துபட்ட வாசகர்களை சென்றடைய உதவும் என்பதால் இடுகிறேன்:

அசுரன் (09:33:09) :
தோழி தமிழச்சி,
இதோ அந்த சுட்டிகள்:
புஜ கட்டுரை: http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4772:2009-01-08-20-51-14&catid=278:2009&Itemid=30

விடுதலை ராசேந்திரனின் எதிர்வினை: http://www.keetru.com/periyarmuzhakkam/feb09/vp_singh.php

ஏகலைவனின் எதிர்வினை : http://yekalaivan.blogspot.com/2009/02/blog-post_24.html
3 03 2009


++++++++++++++++++++++++++++++++

அசுரன் (09:46:56) :
புஜ கட்டுரையின் முக்கிய பகுதிகள்:

“”"
காங்கிரசுக்கு மாற்று என்ற பெயரில் ஆட்சியைப் பிடிப்பதற்காக இந்துவெறி பயங்கரவாதக் கட்சியான பா.ஜ.க.வுடன் சிங் கூட்டணி கட்டினார். அதற்கு முன்பு வெறும் 2 எம்.பி.களை மட்டும் வைத்திருந்த பா.ஜ.க. இவரது உதவியால் 89 இடங்களில் வெற்றி பெற்றது. தனது ஆட்சியின்போது பா.ஜ.க. இட்ட வேலைக்கெல்லாம் தட்டாமல் சேவை செய்தார். இந்து பயங்கரவாதி ஜக்மோகனை பா.ஜ.க. நிர்ப்பந்தத்தால் காஷ்மீரின் ஆளுநராக்கினார். ஜக்மோகன் பதவி ஏற்ற நாளிலிருந்து இந்திய ராணுவம் காஷ்மீரில் பச்சை இரத்தம் குடிக்கத் தொடங்கியது. நாளுக்கு நாள் நூற்றுக்கணக்கான காஷ்மீரிகள் கொன்று வீதிகளில் வீசப்பட்டனர். நாடெங்கும் எதிர்ப்பு வலுத்த பின்னர் வேறுவழியின்றி சிங், ஜக்மோகனைத் திரும்ப அழைத்தார் . “”


“”
1990இல் சோமநாதபுரத்தில் இருந்து அத்வானி தொடங்கிய இரத யாத்திரையை அவர் எந்த இடத்திலும் தடுக்க முயலவே இல்லை. யாத்திரை சென்ற இடமெல்லாம் இரத்தக் களறியை ஏற்படுத்தி, முசுலிம்களைக் கொன்று குவித்தது. அத்வானியின் இந்துவெறி இரத யாத்திரை உ.பி. மாநிலத்தில் மட்டும் 3 மாதங்களில் 600 பேர்களைக் காவு கொண்டது. அலிகாரில் மட்டும் 88 பேரைப் படுகொலை செய்தது. இவ்வாறு நாடெங்கும் இந்துவெறி பயங்கரம் ஆட்டம்போட்டபோதும், தனது நாற்காலி மட்டும் கவிழ்ந்து விடாமல் சிங் பார்த்துக் கொண்டார். கடைசியில் பீகார் எல்லைக்குள் இரத யாத்திரை நுழையும்போதுதான் லாலுபிரசாத்தின் அரசு அத்வானியைக் கைது செய்தது.”"


“”"ராஜீவ் காலத்தில் இந்திய அரசு மேற்கொண்ட அதே பிராந்திய மேலாதிக்கத்தைத் தான் வி.பி.சிங்கின் அரசும் பின்பற்றியது என்பதையோ, காஷ்மீர், அசாம் மாநிலத்தில் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை அவரின் அரசும் கொடூரமாக நசுக்கிக் கொண்டிருந்தது என்பதையோ பேச இவர்கள் வாய் திறப்பதில்லையே, அது ஏன்?”"”


“”"மண்டல் முக்கியமாய் பரிந்துரைத்திருந்த நிலச்சீர்திருத்தத்தைக் கிடப்பில் போட்டுவிட்டு, அரசு வேலை வாய்ப்பில் 27 சதவீதத்தை பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கினார்.”"”


“”"தாராளமயக் கொள்கைக்கு மனிதமுகம் தரும்படி, தன்னார்வக் குழுக்களின் பிரதிநிதியாகத்தான் அவர் இருந்தார். இந்தப் புள்ளிதான் வீரமணியில் இருந்து அ.மார்க்ஸ் வரை உள்ள “சமூகநீதி’ பக்தர்களையும் வி.பி.சிங்கையும் இணைக்கிறது.”"”


“”கடந்த 15 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மறுகாலனியாதிக்கம், பிற்படுத்தப்பட்டவர்களுக்கான அனைத்து அரசு வேலைவாய்ப்புகளையும் அடைத்துவிட்டது. ஆக, மண்டல் பரிந்துரையால் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு நடைமுறையில் எந்தப் பலனும் இல்லை. இருப்பினும், அது ஒரு சமூக நீதிப் புரட்சியை நடத்தி விட்டதாகக் கூறுவது, பிற்படுத்தப்பட்ட மக்களை ஏமாற்றும் தந்திரமே.”"


விடுதலை ராசேந்திரனின் கட்டுரையில் அவர்களது கள்ளப் பார்ப்பனியம் வெளிப்படும் இடம்:

“”தரகு அதிகாரவர்க்க முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அரசியலில் இருந்த ஒருவரே”"

ஒருவர் தரகு அதிகார வர்க்க முதலாளித்துவ நிலபிரபுத்துவ அரசியலில் இருப்பார். அதில் அவர் அதிர்வலை ஏற்படுத்தினாலே பெதிக ஆதரிக்குமாம். இதைவிட சந்தர்ப்பவாத நிலைப்பாடு வேறு எதுவும் இருக்க முடியாது. இப்படி இடஓதுக்கீடு ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு அதற்கு நடைமுறையில் துரோகம் செய்யும் இவர்களை கள்ளப் பார்ப்பனிய கட்சி என்று ஏன் சொல்லக் கூடாது. இதே போல நிலைப்பாடு கொண்ட பேரறிவாளர்களை கள்ளப் பார்ப்பனர்கள் என்று ஏன் சொல்லக் கூடாது? ராசேந்திரன் குறிப்பிட்டுள்ள அந்த நிலப்பிரபுத்துவம் இந்தியாவில் பார்ப்பனியம்தான். எனில் வி. பி. சிங் பார்ப்பனியத்தில் அதிர்வலை ஏற்படுத்தினார் என்பதால் மட்டுமே அவரை விமர்சனமின்றி கொண்டாடும் பெதிகவை ஏன் கள்ளப் பார்ப்பனிய கட்சி என்று சந்தேகப்படக் கூடாது?

அசுரன்

said...

தோழர் மதிமாறனின் தளத்தில் நான் பதிந்த பின்னூட்டம்......

ஏகலைவன் (08:03:12) :
அய்யா அதி அசுரன் அவர்களே!

ஞாநியைப் பற்றிய பதிவென்றால் அவனைப்பற்றி மட்டும்தான் பேசவேண்டுமா? கொளத்தூர் மணியைப் பற்றி மட்டுமல்ல அவன் தனது பார்ப்பன கண்ணோட்டத்தோடு யாரை இழிவுபடுத்தினாலும், அனைவருக்கும் முன்னதாக எதிர்ப்புகளைத் தெரிவிப்பது எமது பழக்கம். ஒரு குறிப்பிட்ட தேதியில், சிங்கள இயக்குனருக்கு ஆதரவாக அவன் எழுதியதை ஏன் எதிர்த்து எழுதவில்லை, என்கிற சொத்தை வாதத்தை ஏதோ பெரிய பகுத்தறிவு நுணுக்கத்தோடு கேட்பதைப் போல உருவகப்படுத்துகிறீர்கள்!

ஆனால், தோழர் மதிமாறன் எழுதியிருக்கும் இந்தப் பதிவு ஞாநியைவிட பெ.தி.க.வான உங்களைத்தான் கேள்விக்குட்படுத்துகிறது. அதுவாவது உங்கள் ஞானக்கண்ணுக்குத் தெரிகிறதா?

//////கடந்த ஆண்டு ஞாநி, தமிழக முதல்வரை ‘திராவிட இயக்கத் தலைவர்’ என்கிற காரணத்திற்காகவே, மிகத் தரக்குறைவாக எழுதியபோது, தமிழகத்தில் மிகப் பரவலாக முற்போக்காளர்களால் கடுமையாக கண்டிக்கப்பட்டார் ஞாநி. அப்போதும் பெரியார் திராவிடர் கழக இதழான ‘புரட்சி பெரியார் ழுழக்கம்’ அவரை பற்றி விமர்சிக்கவில்லை. ‘தோழமையானவராக இருக்கிறார்’ என்று பெருந்தன்மையோடே, அவரை கண்டிக்காமல் விட்டார்கள்.//////

ஞாநியின் பார்ப்பனக் கொழுப்பு அம்பலமான பிறகும் அவனோடு ‘தோழமையோடு இருக்கிறார்’ என்று ‘பெருந்தன்மை’காத்தது நாங்கள் அல்ல. நீங்கள்தான் என்பதற்கு மதிமாறனின் மேற்கண்ட வரிகள் உத்திரவாதம் வழங்குகிறது. பச்சையான பார்ப்பனவாதியான ஞாநியிடம் தோழமை பாராட்டும் நீங்கள் எங்களை எதிர்த்து எழுதுவது குறித்து எங்களுக்கு மிக்க மகிழ்ச்சியே! அதில்தான் உங்களது பார்ப்பன அடிமைத்தனம் அடங்கியிருக்கிறது, அய்யா!

ஞாநிக்கு எப்படி எதிர்வினையாற்றவேண்டும் என்பது பற்றி எங்களுக்குச் சொல்லிக்கொடுக்கும் அருகதை உங்களுக்கும் உங்கள் தலைமைக்கும் இல்லை என்பதை உங்களது செயல்பாடுகளே உறுதிப்படுத்துகின்றன. ஆனால், மையமான விடயம் வேறாக இருக்கிறது.

வி.பி.சிங்கை யும் இடஒதுக்கீட்டையும் குறித்து மாற்றுக்கருத்துக்களைப் பதிவு செய்ததால் பார்ப்பனவாதி என்கிற அவதூறுக்கு நாங்கள் ஆளாகவேண்டும் என்கிற உமது மோசடியான, காழ்புணர்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக விடுதலை ராசேந்திரன் எழுதிய அவதூறுகளுக்கு பதில் சொல்லியுள்ளோம். அந்தப் பதில் அவரது கட்டுரை வெளியிடப்பட்ட கீற்று இணையதளத்திலேயே பின்னூட்டமாக உங்களின் பதில்களுக்காக, கடந்த ஒருவாரத்திற்கும்மேலாக காத்துக்கிடக்கிறது. அங்கே எந்த அதிஅசுரனையும் காணவில்லை. ஆக, இங்கே தென்படுபவர்களிடம் அதற்கான நியாயத்தைக் கேட்பது, பதில்களைப் பெறுவது என்ன பெரிய தேசதுரோகக் குற்றமா? தோழர் மதிமாறனின் பதிவை நாங்கள் திசை திருப்பிவிட்டதாகக் கதறுவது ஏன்? அதுபற்றி இங்கே பேசக்கூடாது என்றால் கீற்றுதளத்தில் வைத்து விவாதிக்கலாம், நீங்கள் வரத்தயாரா?

உங்களால் வரமுடியாது! ஏனெனில், நீங்கள் கடுமையான பணிநெருக்கடியில் இருப்பீர்கள்! நாங்கள் உங்கள் பணிகளில் உள்ள புனிதத்தைமட்டும் இங்கே வாசித்துவிட்டு வாயை மூடிக்கிடக்க வேண்டும்! இது கேளிக்கைக் கூடாரமல்ல. இங்கே அரட்டையடிக்க நாம் குழுமியிருக்கவில்லை.

ஏதோ கொளத்தூர் மணி தான்’ ராஜீவ் கொலையா-தண்டனையா’ என்கிற விவாத்தை கிளப்பிவிட்டுள்ளதாகவும், அதனை திசைதிருப்புவதற்காக நாங்கள் வேலைசெய்வதாகவும் உதார் விட்டுக்கொண்டிருக்கிறீர்கள்.

ராஜீவ் குண்டடிபட்டு குப்புறக் கிடந்தபோதே, அதனை துணிவோடு ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்தது எமது தோழர்கள்தான் என்பது உங்களுக்குத்தெரியாது போலும்! நீங்கள் வழிபடும் விடுதலைப்புலிகளின் தலைவர்களில் ஒருவராயிருந்த கிட்டு என்பவர் “ராஜீவ் கொலையில் புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரத்தின் தொடர்பு இருக்கிறது…” என்று மோசடியாக அறிவித்தபோதும் எமது தோழர்கள் துணிவோடு வழக்குகளைச் சந்தித்து எழுந்து நின்றார்கள். எனவே, ராஜீவுக்கு தண்டனைதான் வழங்கப்பட்டது என்கிற கருத்துக்களை ராஜீவ் செத்த நாளிலேயே நாங்கள் பேசியிருக்கிறோம், நீங்கள்தான் அப்போது காணாமல் போயிருந்தீர்கள்.

இது நம்முடைய சாதனைகளை உரசிப்பார்த்துக்கொள்வதற்கான களம் அல்ல. ம.க.இ.க.வோ தோழர் மருதையனோ பார்ப்பனவாதிகள் என்கிற பல்லவியை நீங்கள் தொடருவதற்கு முன்னதாக அவற்றை கருத்தியல் ரீதியில் நிரூபித்துவிட்டு யோக்கியமாகப் பேசிப்பழகுங்கள்.

தொடர்ந்து பேசுவோம்.

தோழமையுடன்,
ஏகலைவன்.

4
03
2009
ஏகலைவன் (08:15:23) :
தோழர் தமிழச்சியைப் பற்றி எனக்குத் தெரியும். தனக்குத் தவறு என்று படுவதை உடனே வெளிப்படையாகப் பேசுவார். தனக்கு நன்கு அறிமுகமாயிருந்த ‘மானமிகு’வீரமணியைப் பற்றி அவர் புரிந்து கொண்டதும் கடுமையாக விமர்சித்து எழுதியிருக்கிறார். அதேபோல, தன்னுடைய தவறுகளையும் தைரியமாக ஒப்புக்கொள்வார். மேற்கண்ட அவரது வார்த்தைகள் வெறும் உணர்ச்சி நிலையிலிருந்து எமது தோழர்களின் மீது பிரயோகிக்கப்பட்டிருப்பதாக அறிகிறேன்.

உணர்ச்சிகளுக்கு ஆட்படாமல், கருத்துக்களை மாற்றுக்கருத்துக்களோடு அனுகவேண்டும் என்று அவரைக் கேட்டுக்கொள்கிறேன்.

இங்கே பெ.தி.க.வுக்கு ஆதரவாக தொடர்ச்சியாகக் கருத்து பதிந்துவருவதும் தமிழச்சிதான். எனவே, அதிஅசுரன், மதிமாறன், இன்னபிற பெ.தி.க.வினருக்கு நாம் முன்வைக்கும் கேள்விகளுக்கெல்லாம் தோழர் தமிழச்சி பதில் சொல்லவேண்டும் என்றும் கோருகிறேன்.

ஏகலைவன்.

said...

///இங்கே பெ.தி.க.வுக்கு ஆதரவாக தொடர்ச்சியாகக் கருத்து பதிந்துவருவதும் தமிழச்சிதான். எனவே, அதிஅசுரன், மதிமாறன், இன்னபிற பெ.தி.க.வினருக்கு நாம் முன்வைக்கும் கேள்விகளுக்கெல்லாம் தோழர் தமிழச்சி பதில் சொல்லவேண்டும் என்றும் கோருகிறேன்.

ஏகலைவன்.///

தோழர் ஏகலைவன் இது எந்தவிதத்தில் நியாயமாகும்? தோழர் அதிஅசுரனாவது இணையத்திற்கு வர நேரமில்லை என்று சொல்லலாம். பதிவு போட்ட தோழர் மதிமாறன் சார்பாகவும் நான் பேசவேண்டும் என்பது நியாயமான கோரிக்கை அல்ல. இரு கட்டுரைகளையும் இன்று இரவு படித்துவிட்டு பதில் நிதானமாக எழுதுகிறேன் தோழர். இதில் இருக்கும் பின்னூட்டங்களுக்கு பதில் எழுதவே நேரம் சரியாக இருக்கு.

said...

தோழர் மரணஅடி பேருக்கு ஏத்த வேளையை செய்துக் கொண்டிருக்கிறார். இதே பின்னுட்டத்தை வினவு தளத்தில் போட்டிருக்கிறார். இங்கேயும் பதிவு செய்திருக்கிறார். ஆனால் விவாதம் நடந்துக் கொண்டிருக்கும் தோழர் மதிமாறன் தளத்தில் எந்த விவாதத்தையும் வைக்கவில்லை.

தோழன் ஏகலைவன் மரணஅடியின் பின்னூட்டத்தின் உள்நோக்கம் வேறு கோணத்தில் செல்கிறது. இருப்பினும் அதை அனுமதித்து என்னை அவமதிப்பு செய்திருக்கிறீர்கள். இதுவரை உங்கள் செயல்பாடுகளில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டதில்லை. முதல் முறையாக சந்தேகம் வருகின்றது. இதற்கு மேல் உங்களுடன் விவாதிக்க விருப்பமில்லை.


இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.


நன்றி

Anonymous said...

இதையும் பாருங்கள் !

ஜெயாவின் ‘மாமியாட்டம்’

http://vitudhalai.wordpress.com/2009/03/13/%e0%ae%9c%e0%af%86%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d/