Wednesday, July 14, 2010

ரகசியமாத் தப்பு பண்ணத் தெரியல்ல – திருப்பூர் ’கோவிந்தா’சாமி நீக்கம்!

கடைசியில் கோவிந்சாமி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். யார் இந்த கோவிந்சாமி? திருப்பூர் சி பி எம் கட்சியின் எம் எல் ஏதான் இந்த கோவிந்சாமி. பின்னலாடை நிறுவனத்தின் முதலாளி என்பது உபதொழில்.

எதற்கு கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்? இதுக்கு முன்ன திருப்பூர் முதலாளிகளுக்கு தொழிலாளர் நலச் சட்டக் கெடுபிடிகளிலிருந்து சலுகை வாங்கித் தருவதாக சொல்லி அவர்களிடம் வசூல் வேட்டை நடத்தி மாட்டிக்கொண்டதால் அவர் நீக்கப்பட்டாரா? இல்லை. திமுகவிற்கு பாராட்டு விழா நடத்த முற்பட்ட குற்றத்திற்காகவே நீக்கப்பட்டுள்ளார்.

அப்போ இதுவரை அவர் திருப்பூர் முதலாளிகளுக்கு கோவணம் கட்டியதற்கு? தோழரே சி பி எம் ஒரு கம்யூனிஸ்டு கட்சியல்ல என்று சி பி எம்முக்கே தெரியும் என்பதால் முதலாளிகளுக்கு கோவணம் கட்டிய குற்றத்திற்கெல்லாம் கட்சியிலிருந்து நீக்க மாட்டோம். அப்படி நீக்குவதாயிருந்தால் செத்துப் போன ஜோதிபாசுவிலிருந்து இன்றைய காரத் வரைக்கும் மொத்த கட்சியையும் நீக்க வேண்டியிருக்கும். எனவே, எங்களது எதிர்கட்சிக்கு கோவணம் கட்டினால் மட்டுமே நீக்குவோம் என்று ஒரு மனசாட்சியின் குரல் கேட்கிறது….. எங்கேயோ கேட்ட குரல்….




தோழர்களே!

மேற்குறிப்பிட்டுள்ள வரிகள் தோழர் அசுரனின் தளத்தில் அவர் பதிந்திருக்கும் சமீபத்திய பதிவின் மிகப் பொருத்தமான வரிகள். போலிகம்யூனிச கட்சியின் எஞ்சியுள்ள ஒரே அடையாளமான செங்கோவனமானது அவ்வப்போது கிழிந்து தொங்குவதும், அதனை ஏதாவது ஒரு நொண்டிச் சாக்குகளைக் கூறி மீண்டும் ஒட்டவைத்துக் கொள்ள போலிகள் போராடுவதையும் நாம் வழக்கமாகப் பார்த்துத்தான் வருகிறோம். என்னதான் நாமாக முன்வந்து அரசியல்-சித்தாந்த ரீதியில் அவர்களை அம்பலப்படுத்தினாலும், அவர்கள் தங்களைத் தாங்களே அம்பலப்படுத்திக் கொண்டு சந்தி சிரிக்கின்ற அளவுக்கு நம்மால் அவர்களைச் சிக்க வைக்க முடியாதுதான் போலிருக்கிறது.

உ.ரா.வரதராசனின் கொலையை தற்கொலை என்று கண்ணீரும் கம்பலையுமாக நிரூபிக்க அழுதார்கள் போலிகள். மத்திய கால திரைப்படம் ஒன்றில், கவுண்டமணியும் சத்தியராஜும் வாடகைக்கு வீடு தேடி அலைவார்கள். கவுண்டமணி மட்டும் இசுலாமியப் பெண்கள் அணியக்கூடிய பர்தாவை அணிந்து பெண்வேடத்தில் செல்வார். அந்த வீட்டு ஓனர் சற்று சந்தேகப்பட்டு கவுண்டமணியின் பர்தாவைக் கொஞ்சம் விலக்கிப் பார்க்க முயலுவார். அதற்குள்ளாக கவுண்டமணி “அய்ய்யோ பாத்துட்டானே, பாத்துட்டானே....” என்று கூச்சலிட்டு ஊரைக்கூட்டுவார். அதேபோல போலிகளின் அயோக்கியத்தனம் ஊரறிந்த ரகசியமாக இருக்கையில், ஏதோ மக்கள் தொலைக்காட்சி தான் தங்களது நேர்மையைக் கொச்சைப்படுத்திவிட்டதாக கவுண்டமணியின் பாணியில் கூச்சலிட்டுக் கொண்டு அத்தொலைக்காட்சியின் அலுவலகத்திற்கு முன்பாகத் திரண்டு அவர்கள் போட்ட ஆட்டத்தை நாம் அறிவோம். அந்த ஓலம் அடங்கிய சில மாதங்களிலேயே இதோ இன்னொரு ஓலம். திருப்பூர் ’மார்க்சிஸ்டு’ எம்.எல்.ஏ. கோவிந்தசாமி, அக்கட்சியின் அரசியல் கழிசடைத்தனத்தின் ஒரு அங்கமாகத் திகழ்ந்து கட்சிக்கு ’கோவிந்தாசாமி’யாகி தண்ணி காட்டிக்கொண்டிருக்கிறார். இதற்கு மேலும் பொறுமையாயிருந்தால் மிச்சமிருக்கும் அடையாளங்களும் பறிபோய்விடும் என்பதால், வேறு வழியின்றி இப்போது அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்டிருக்கிறார்.

உ.ரா.வரதராசனின் நடவடிக்கைக்கும் நம்ம ‘கோவிந்தா’சாமியின் நடவடிக்கைக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. உ.ரா.வரதராசன் மரணத்திற்கு முந்தைய தனது இறுதிக் கடித்த்தில் (பொதுச்செயலாளர் பிரகாஷ்காரத்துக்கு உ.ரா.வ. எழுதிய அக்கடிதம்) “பல பெண்களுடன் இழிவான முறையில் உடல்ரீதியிலான உறவு வைத்துக் கொண்டிருப்பவர்கள், கட்சியின் (சி.பி.எம். கட்சியின்) பொலிட்பீரோவிலும், ஏனைய மாநில அளவிலான தலைமைப் பொறுப்புகளிலும் இருக்கும் போது; அவர்கள் நிறைய புகார்களுக்கும் விசாரனைக்கும் உட்படுத்தப்பட்ட பிறகும் கூட அவர்கள் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்க விரும்பாத கட்சியின் தலைமை, என்மீது ஒரு தலைப்பட்சமாக நடவடிக்கை எடுத்திருப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பியிருந்தார். அக்கடிதம் எல்லாத் தமிழ் வார ஏடுகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகி நாறியது. அதற்கு போலிகள் எந்த பதிலும் சொல்லாமல், மக்களின் மறதியை மலைபோல நம்பிக் காத்திருந்தனர்.

அதேபோல, நேற்று திருப்பூர் கோவிந்தசாமி வெளியிட்ட அறிக்கையில், உ.ரா.வ.வின் நிலைதான் தனக்கும் நேர்ந்திருக்கும் என்று நொந்துகொண்டு அனுதாபம் தேட முற்பட்டார். அதனைத் தொடர்ந்து, தன்னைவிடக் கூடுதலான தவறுகளை அல்லது தான் செய்யத்துணியாத கட்சி விரோத செயல்களை வெளிப்படையாகச் செய்து வரும் ஏனைய சட்டமன்ற உறுப்பினர்கள் இன்னும் கட்சிக்குள் சகல செல்வாக்குடன் நட்த்தப்படும்போது தன்மீது மட்டும் ஒருதலைப்பட்சமாக அக்கட்சி நடந்து கொள்வதாகவும் நொந்து கொண்டார்.

அதாவது தாம் மட்டுமல்ல, தமது கட்சியின் தலைமை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளின் கழிசடைத்தனம் இப்படியிருக்க தாம் மட்டும் ஒருதலைப்பட்சமாகப் பழிவாங்கப்படுகிறோம், என்கிற உண்மை நிலையை இருவரும் ஒத்த குரலில், அடுத்தடுத்து தெரிவித்திருக்கின்றனர். உ.ரா.வ.வின் மரணம் கொலையா-தற்கொலையா என்கிற வெட்டி வாத்த்திற்குள்ளாக அவர் கடிதம் மூலம் சுட்டிக்காட்டிய, தலைவர்களின் அயோக்கியத்தனம் இருட்ட்டிப்பு செய்யப்பட்டதுபோல, திருப்பூர் கோவிந்தசாமி தி.மு.க.விசுவாசியானதால் மார்க்சிஸ்ட் விரோதியாகிவிட்டார் என்பன போன்ற சில்லரைத்தனமான ஓட்டுப்பொறுக்கிக் கருத்துக்களுக்குள், அவர் உள்ளிட்ட ஏனைய சி.பி.எம். எம்.எல்.ஏ.க்களின் மோசடிகள் மூழ்கடிக்கப்படுகின்றன போலும்!

நமது கிரிக்கெட் அணியின் இந்திய தேசப்பற்றை பத்திரமாக உள்ளாடைக்குள் மறைத்து வைத்துக் கொண்டு தமது பெப்சி, கோக்கின் மீதான பற்றுதலை உலகுக்கு எடுத்துக்கூறும் வகையில் மேலாடைகளிலும், மட்டை, தொப்பி உள்ளிட்ட தனது அங்கத்தின் மீதான அனைத்து பாகங்களிலும் வெளிப்படுத்தும் கிரிக்கெட் கழிசடை ‘வீரர்’களைப்போல, போலிக்கம்யூனிச தலைமையானது தமது கம்யூனிச அடையாளங்களை உள்ளாடைகளில் மட்டும் மூடி இரகசியமாக வைத்துக்கொண்டு, தி.மு.க., காங்கிரசு, அ.தி.மு.க. உள்ளிட்ட ஏனைய ஓட்டுப் பொறுக்கிகளின் அடையாளங்களையே மேலங்கியாக ஒவ்வொரு தேர்தலிலும் உவப்போடு சுமந்து திரிகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் கோக், பெப்சி திணிப்புக்கு இரையாகி நமது இளைஞர்கள் அந்நிய குளிர்பான்ங்களுக்கு அடிமையாகிவிடுவதைப் போலவே, போலிக்கம்யூனிசத் தலைமையின் ஓட்டுப்பொறுக்கி அரசியல் திணிப்புக்கு ஆட்பட்டு அக்கட்சியினர் ஏனைய ஓட்டுக்கட்சிகளுக்கு சாரை சாரையாக படையெடுத்து, ஐக்கியமடைந்து விடுகின்றனர்.

விஜயகாந்த கட்சிக்கு கே.கே.நகர், எம்.ஜி.ஆர்.நகரைச் சார்ந்த ஆயிரக்கணக்கான சி.பி.எம். கட்சியினர் ஒரு கட்டைப்பஞ்சாயத்து ரவுடியும், சி.பி.எம். கட்சியின் முன்னாள் மாவட்ட பொறுப்பாளருமான காமராஜ் என்பவரது தலைமையில் சென்று ஐக்கியமடைந்தனர். நாகையைச் சார்ந்த சி.பி.எம். கட்சியின் ஒரு பகுதியினர் பா.ஜ.க.வுக்கும் தி.மு.க.விற்கும் தாவிச் சென்றனர். மதுரை மாவட்டங்களில் அண்ணன் அழகிரியின் சாம்ராஜ்யத்திற்குள் தம்மை இணைத்துக் கொண்டு, அண்ணனின் அரசியல் சாக்கடையில் சங்கமித்தவர்கள் ஆயிரக்கணக்கானோர். மதுரை, வில்லாபுரத்தில் கொலை செய்யப்பட்ட தோழர் லீலாவதியின் மகள் கலாவதியும், கலாவதியின் கணவர் ராமசுப்புவும் சில நூறு பேர்களுடன் சென்று அ.தி.மு.க.வில் தஞ்சமைடந்தனர். திருநெல்வேலி சி.பி.எம்.மின் நகர செயலாளர் கனகசாமி என்பவர் கட்சிக்குள் கருமலையான் என்கிற தேவர் சாதிவெறி - கட்டைப்பஞ்சாயத்துக்காரனின் தாக்குதலைச் சமாளிக்க முடியவில்லை என்று சொல்லி சரத்குமார் தொடங்கியுள்ள நாடார் கட்சியில் இணைந்து கொண்டுவிட்டார். ’எழில்மிகு சிங்கார சென்னை’யின் மாநகர மேயரான மா.சுப்பிரமணியம் கூட சி.பி.எம்.மிலிருந்து கணிசமான நபர்களுடன் தி.மு.க.வுக்கு வந்தவர்தான். இப்படியாக இன்றைய திருப்பூர் கோவிந்தசாமியின் முன்னோடிகளின் பட்டியலை அடுக்கிக்கொண்டே போகலாம். புள்ளிவிபரங்களுக்குப் பஞ்சமில்லை.

இவ்வளவு வெளிப்படையாக்க் கட்சி மாறி வலம் வரும் அவர்கள், எடுத்து வைப்பது ஒரே நியாயம்தான். அது, தேர்தலுக்குத் தேர்தல் எந்த்த் தயக்கமுமின்றி அணிமாற்றிக் கொண்டு ஆபாச அரசியல் நடத்தும் தலைமையை விட, ஓரிருமுறை கட்சித்தாவுகின்ற தமது நடவடிக்கை இழிவானதல்ல என்பதுதான், அவர்கள் அழுத்தமாகச் சொல்லவருகின்ற நியாயம்.

திருப்பூர் கோவிந்தசாமியின் மீது நடவடிக்கை எடுத்து கடமையாற்றிய கட்சியின் பெருமையை எடுத்தியம்பியுள்ள தீக்கதிரைச் சுட்டிக்காட்டி, அக்கட்சியினைச் சார்ந்த நேர்மையான தோழர் ஒருவர் அவமானத்தோடு சொன்ன கருத்தை நிச்சயமாக இப்பதிவில் சுட்டிக்காட்ட வேண்டும் என்று கருதுகிறேன். “கல்விக் கட்டணக்கொள்ளைக்கு எதிராகப் போராடுவதாக சி.பி.எம்.-மாணவர் சங்கத்தின் செய்திகளையும் சவடால்களையும் அரைப்பக்கத்திற்கு பதிப்பித்திருக்கும் தீக்கதிர், அதற்கடுத்த பக்கத்திலேயே ஒரு முழுபக்க அளவிற்கு தனியார் பள்ளியின் வண்ண விளம்பரத்தை வெளியிடுகிறதே, இது மோசடியில்லையா?”, “தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களும், தேனீர் கடை நடத்துபவர்களும் படும் துயரங்களுக்காக தீக்கதிர் வெளியிட்ட சிறப்பிதழுக்கான ஸ்பான்சர்ர் யார் தெரியுமா? அதே இலட்சக்கணக்கான தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை வீதியில் வீசியெறிந்த ’ப்ரூக்பாண்ட்-இந்தியா’ என்கிற நிறுவனம்தான். அந்நிறுவனத்தின் வண்ண விளம்பரங்களை பக்கத்திற்கு பக்கம் வெளியிட்டு மிச்சமிருக்கின்ற இடத்தில் தேயிலைத் தொழிலாளர்களின் உரிமை என்று எதையோ எழுதுவது அயோக்கியத்தனமில்லையா?” கட்சியின் தலைமை நடத்துகின்ற பத்திரிக்கை தான் கோவிந்தசாமிகளுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளது. அ.தி.மு.க.வின் கூட்டணியிலிருக்கும் நிலையில் அக்கட்சியின் எம்.எல்.ஏ. ஒருவர் தி.மு.க.வுக்கு பாராட்டுவிழா நடத்துவது என்பது தீக்கதிர் சொல்லிக்கொடுத்த பாடமல்லவா? என்பதுதான் அத்தோழரின் கேள்வி.

செம்மொழி மாநாடு, கருணாநிதியின் குடும்பவிழா அல்ல, அது ஒரு பொதுநிகழ்வு என்பதுதான் சி.பி.எம். – தமுஎகச வின் குருட்டுத்தனமான நிலைப்பாடு. ஆகவே அத்தகைய ‘பொது நிகழ்வில்’ கட்சி பேதங்களுக்கும், ’கூட்டணி தர்மங்களுக்கும்’ அப்பாற்பட்டு தமிழ் என்ற பொதுவான அம்சத்தில் சங்கமித்ததாக சீத்தாராம் எச்சூரியின் செம்மொழி மாநாட்டுப் பங்களிப்பையும், அவர் செம்மொழி மாநாட்டு மேடையில் சற்றும் கூசாமல் கருணாநிதிக்கு துதிபாடியதையும் நியாயப்படுத்துகிறது, அக்கட்சியும் அதன் ஏடுகளும். அதேபோலத்தான் மு.க.ஸ்டாலினுக்கும், அ.ராசாவுக்கும் துதிபாடுவதை திருப்பூர் கோவிந்தசாமி, தொகுதியின் சார்பாக நடத்தப் படும் பொதுவான நிகழ்ச்சி என்கிற தோற்றத்தோடு நிகழ்த்தவிருக்கிறார். தலைவர் யெச்சூரி சென்ற மாதம் காட்டிய வழியில், தொண்டர் கோவிந்தசாமி இந்தமாதம் நடைபோடுவது குற்றமா?

செம்மொழி மாநாட்டைப் பாராட்டி, தி.மு.கழக உடன்பிறப்புக்கள் ஊர்த்தாலியை அறுத்துக் கொடுத்த காசை உவப்போடு பெற்றுக் கொண்டு, அவர்கள் ஏதோ தங்கள் பகுதியில் நிறைய சாதித்ததாக விளம்பரப்படுத்தியது தீக்கதிரின் செம்மொழி மாநாட்டுச் சிறப்பு மலர். கிருஷ்ணகிரி மாவட்ட தி.மு.க.வும் சேலம் மாவட்ட தி.மு.க.வும் இன்னும் ஏனைய சில மாவட்ட, வட்ட கழகமும் திக்கதிரில் ஒரே விளம்பர மழையாகப் பொழிந்த வண்ணமிருந்தார்களே; அவர்கள் தொகுதியை வளர்த்துவிட்டதாகக் கதையளந்து பட்டியலிட்டு ஒரு எதிர்க்கட்சியின் பத்திரிக்கையிலேயே விளம்பரப்படுத்தியிருந்தார்களே, இவையெல்லாம் கட்சித்தாவலாகவோ, கொள்கைத்தாவலாகவோ எடுத்துக்கொள்ள முடியாதா?!

இது அப்படியல்ல. பத்திரிக்கை என்பது தொழில். அதற்கும் கட்சியின் அரசியலுக்கும் சம்பந்தமில்லை என்பதுதான் தீக்கதிரின் விளம்பர மேலாளர் நீதிராஜனின்(!) வாதம். விளம்பரங்களால் கிடைக்கும் பணம்தான் பத்திரிக்கை தொடர்ந்து வெளிவருவதற்கான அடிப்படை என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார் அவர். கட்சியின் மாநிலக்குழுவால் நடத்தப்படும் ’அரசியல்’ பத்திரிக்கைக்கே காசுதான் கோவணம் என்றால், கட்சிக்கும் அது பொருந்தும்தானே. அதனால்தான் சாராய ரவுடியும், கல்விக் கொள்ளையனுமான ஜேப்பியார்களின் காசுதான் கட்சிக்கு கோவணமாக இருந்துவருகிறது. திருப்பூர் கோவிந்தசாமி தமது கோவணத்தை (தி.மு.க. ஆதரவோடு) வேட்டியாக விரித்துக் கட்ட முயலுகிறார். தமது அயோக்கியத்தன்ங்களைக் கேள்விக்குட்படுத்தவோ, நடவடிக்கை எடுக்கவோ தமது கட்சிக்கு எந்தத் தகுதியும் திராணியும் கிடையாது என்பதுதான், கோவிந்தசாமிக்களின் மலைபோன்ற நம்பிக்கையாகும்.

தோழர் அசுரன் மேலே குறிப்பிட்டுள்ளதைப் போல, இது திமுக-வுடனான பிரச்சினை என்பதாக உருவகப்படுத்துகின்ற சி.பி.எம். கட்சியின் நடவடிக்கைகளுக்குள், முதலாளித்துவத்தை நத்திப் பிழைக்கும் இழிநிலையும், பாட்டாளிவர்க்கத்துக்கு துரோகமிழைக்கும் கொடுமையும் மூழ்கடிக்கப்பட்டிருக்கிறது. கட்சியின் எம்.எல்.ஏ. பதவியையும் சட்டமன்றக் கட்சித்தலைவர் என்ற பதவியையும் பயன்படுத்தி இலட்சக்கணக்கான ரூபாய் பணத்தை பனியன் கம்பெனி முதலாளிகளிடம் வசூலித்து; மாதசம்பளமாக ஆயிரத்திற்கும், இரண்டாயிரத்திற்கும் நாள் முழுக்க சுரண்டப்படுகின்ற அப்பாவி தொழிலாளர்களின் உரிமைகளைப் பறித்து முதலாளித்துவ ஒடுக்குமுறைக்குள் அவர்களைத் தள்ளியிருக்கிறார், இந்த ‘மார்க்சிஸ்ட்’ எம்.எல்.ஏ.

இருப்பினும் அந்த இழிசெயலுக்காக, அவருடைய தொழிலாளர் விரோத நடவடிக்கைகளுக்காக அல்லாமல், வெறும் கட்சித்தாவல் நடவடிக்கைகாக மட்டும் சும்மா பெயரளவுக்குத் தண்டித்திருக்கிறது, அக்கட்சியின் தலைமை. முதலாளிவர்க்க சேவகத்திற்காகவும், அவர்களை நத்திப் பிழைப்பதற்காகவும் தொழிலாளிவர்க்கத்தின் உரிமைகளைப் பலியிடக் கோருகின்ற அக்கட்சியின் நடவடிக்கைகளைத்தான் போலிகம்யூனிசத் தன்மை என்கிறோம். உண்மையான சமூகமாற்றத்தை விரும்பும் சி.பி.எம்.மின் நேர்மையான அணிகளே விழித்துக்கொள்ளுங்கள்! ஓட்டுப்பொறுக்கி அரசியல் சாக்கடையிலிருந்து விடுபட்டு புரட்சிகர அரசிலில் உங்களை இணைத்துக்கொள்ளுங்கள்!!

புரட்சிகர வாழ்த்துக்களுடன்,
ஏகலைவன்.
yekalaivan@gmail.com